மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 March 2019 11:58 PM GMT (Updated: 22 March 2019 11:58 PM GMT)

மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை, 

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் குமார் பக்வத்(வயது57). இவரது மனைவி சேனாலி.

இவரது வீட்டில் இருந்து நேற்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் கதவை உடைந்து உள்ளே சென்றனர்.

அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். மேலும் மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும் இதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story