சேலத்தில் அதிகாரிகள் வாகன சோதனை: 20 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.15 லட்சம் பறிமுதல்


சேலத்தில் அதிகாரிகள் வாகன சோதனை: 20 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.15 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 9:19 PM GMT)

சேலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1.15 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், சேலம் மாநகராட்சி ஆணையாளரும், தெற்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சதீஷ் உத்தரவுப்படி கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த சைலேந்திரசிங் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் 13 கிலோ வெள்ளி பொருட்கள் கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்த 13 கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 57). இவர், நேற்று காலை பனமரத்துப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சேலம் குகை காளியம்மன் கோவில் அருகே வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் 7 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் ஏழுமலையிடம் இல்லை. இதனால் 7 கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

இதேபோல், சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டையில் நேற்று பறக்கும் படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை செய்தபோது, அவர் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி தோட்டக்காடு பகுதியை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஜெய்சந்திரன் (32) என்பது தெரியவந்தது. அவர், ஓட்டலுக்கு தேவையான பொருட்கள் வாங்க சேலத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை சேலம் மேற்கு தொகுதி உதவி கலெக்டர் சாரதா ருக்மணியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

சேலத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த வாகன சோதனையில் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story