நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல், ஆசிரியர் சாவு


நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல், ஆசிரியர் சாவு
x
தினத்தந்தி 25 March 2019 9:59 PM GMT (Updated: 25 March 2019 9:59 PM GMT)

நெய்வேலியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்வேலி,

பண்ருட்டி தாலுகா மானாடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செந்தமிழ்செல்வன்(வயது 32). இவர் 10-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் 27-வது வட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே சென்ற நாய் மீது மோதாமல் இருக்க செந்தமிழ்செல்வன் பிரேக் பிடித்தார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தமிழ்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story