எந்த ரக நெல்லை ரெயிலில் ஏற்றுவது என்பதில் குழப்பம்: சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்


எந்த ரக நெல்லை ரெயிலில் ஏற்றுவது என்பதில் குழப்பம்: சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 5:11 PM GMT)

எந்த ரக நெல்லை ரெயிலில் ஏற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் சாலையோரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அப்படி குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட்டால் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும். இல்லையென்றால் ஆழ்குழாய் கிணறு மூலம் குறைந்த பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு ஆறுகளில் தண்ணீர் வந்ததால் சம்பா சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் அம்மன்பேட்டை, பிள்ளையார்பட்டி, குருங்குளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இப்படி இருப்பு வைக்கப்படும் நெல், அரவைக்காக பிற மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி நேற்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலைய வளாகத்தில் எடை போடும் எந்திரம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.


குண்டு ரக நெல், நீள ரக நெல் என 2 ரக நெல் மூட்டைகள் 180 லாரிகளில் கொண்டு வரப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல 42 வேகன்கள் கொண்ட சரக்குரெயில் தேவைப்படும். ஆனால் 21 வேகன்கள் மட்டுமே தயாராக இருந்ததால் எந்த ரக நெல்லை ஏற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டது. 2 ரக நெல் மூட்டைகளும் லாரிகளில் கொண்டு வரப்பட்டதால் எந்த ரகத்தை முதலில் ஏற்றுவது என அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனால் லாரிகளில் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் எடை போடப்படவில்லை. இதன்காரணமாக லாரிகளில் வரிசையாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 6 மணிநேரத்திற்கு மேலாக எடை போடப்படாததால் சாலையின் இருபுறமும் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர்.

Next Story