கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு


கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 8:30 PM GMT)

ரெட்டையாளம் கிராம மக்கள் சார்பில் தேர்தலை புறக்கணிப்பதாக விளம்பர பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே ரெட்டையாளம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல வருடங்களாக சாலை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பில், தார்சாலை இப்பகுதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் இந்த சாலையை ஒப்பந்தம் எடுத்ததாக கூறப்படுகிறது.ஆனால் இந்த சாலை போடும் பணிகள் ஒரு மாதம் மட்டுமே நடைபெற்றது. பின்னர் வேலை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கிராம மக்கள் கரடு முரடாக இருக்கும் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்து இருந்தோம். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தபகுதி கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். பின்னர் இந்த அறிவிப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்ற விளம்பர பதாகையையும் கிராமமக்கள் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story