ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் சாவு தந்தை-மகன்கள் பலியான பரிதாபம்


ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் சாவு தந்தை-மகன்கள் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 27 March 2019 12:10 AM GMT (Updated: 27 March 2019 12:10 AM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விநாயகா நகர் நெமிலி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). இவருக்கு லதா என்ற மனைவியும், கண்ணன் (27), கார்த்தி (26) என 2 மகன்களும் இருந்தனர். இவர் தனது வீட்டின் மாடியில் 10 அறைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

மேலும் வீட்டின் முன் பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வீட்டின் தரைத்தளத்தின் முன்பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்ற கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். இதனையடுத்து நேற்று மதியம் கழிவுநீரை அகற்றுவதற்காக தனியார் வாகனம் வரவழைக்கப்பட்டது.

முதல் கட்டமாக கழிவுநீரை வாகனம் மூலம் உறிஞ்சி எடுத்தனர். பின்னர் தன் வீட்டில் குடியிருக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபாய் (28) என்பவரை கழிவுநீர் முழுவதும் அகற்றப்பட்டு விட்டதா? என பார்க்கும்படி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதையடுத்து சுரதாபாய் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார்.

சிறிதுநேரத்தில் அவர் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் சுரதாபாய் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் விழுந்தார். கணவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையே என சந்தேகம் அடைந்த லதா, தனது மகன்களிடம் இதுகுறித்து கூறினார்.

உடனே கண்ணன், கார்த்தி ஆகியோர் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கி உள்ளே விழுந்தனர். லதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் குடியிருக்கும் பரமசிவம் (28) என்பவர் கழிவுநீர் தொட்டியில் இறங்கினார். அவரும் தொட்டிக்குள் விழுந்தார்.

இதையடுத்து அந்த வழியாக வந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் லட்சுமிகாந்தன் (22) உதவிக்கு ஓடிவந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய அவரும் மயங்கி உள்ளே விழுந்தார்.

உடனே இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியின் உள்ளே தண்ணீரை பாய்ச்சி விஷவாயுவை கலைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கிபார்த்தனர்.

அங்கு கிருஷ்ணமூர்த்தி உள்பட 6 பேரும் விஷவாயு தாக்கி இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை கயிறு கட்டி மேலே எடுத்து வந்தனர். மீட்கப்பட்ட உடல்களை போலீசார் பிரேதபரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விஷவாயு தாக்கி பலியானவர்களை கயிறு கட்டி மேலே தூக்கி வந்த தீயணைப்பு வீரர் கதிரவன் என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று அரைமணி நேரத்தில் அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார். கதிரவனை ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டினார்.

இதற்கிடையே விஷவாயு தாக்கி 6 பேர் பலியான இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, காஞ்சீபுரம் உதவி கலெக்டர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து உதவி கலெக்டர் சரவணன் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் மனதுக்கு வேதனை அளிக்கிறது. கழிவுநீரை வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் பொதுமக்கள் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது. கழிவுநீரை தொட்டியில் இருந்து வெளியேற்றும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக விழிப்புடன் செயல்பட வேண்டும். பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியான கிருஷ்ணமூர்த்தியின் மகன் கண்ணனுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் வீட்டார் கண்ணனின் வீட்டிற்கு வந்து சென்றனர். இன்னும் 10 நாட்களில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்தது. அதற்குள் இப்படி அசம்பாவிதம் நடந்து விட்டதே? என அக்கம்பக்கத்தினர் வருத்ததுடன் தெரிவித்தனர்.

Next Story