துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 March 2019 10:45 PM GMT (Updated: 30 March 2019 8:31 PM GMT)

துறையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துறையூர்,

துறையூர் நகராட்சி 16-வது வார்டு சிக்கன்பிள்ளையார் கோவில் தெருவில் குட்டக்கரையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை தான் காவிரி கூட்டுக்குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உப்பு தண்ணீர் மோட்டார் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வருவதில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் குழாயிலும் நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பெரிய கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர்- பெரம்பலூர் சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Next Story