சேலையூரில் கட்டுமான நிறுவன அதிபர் கொலையில் டிரைவர் கைது தலைமறைவான மந்திரவாதியை பிடிக்க தனிப்படை தீவிரம்


சேலையூரில் கட்டுமான நிறுவன அதிபர் கொலையில் டிரைவர் கைது தலைமறைவான மந்திரவாதியை பிடிக்க தனிப்படை தீவிரம்
x
தினத்தந்தி 31 March 2019 10:30 PM GMT (Updated: 31 March 2019 7:20 PM GMT)

சேலையூரில், சொகுசு காரில் கட்டுமான நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் அவரது முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மந்திரவாதி உள்பட 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கீழ்கட்டளை அருள்முருகன் நகர் விரிவு, 4-வது தெருவைச்சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42). கட்டுமான நிறுவன அதிபர். இவர், கடந்த 29-ந்தேதி தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம்தென் அன்னை சத்யாநகர், சாரதாம்மாள் தெருவில் உள்ள காலி இடத்தில் தனது சொகுசு காருக்குள் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார், இது தொடர்பாக விசாரித்தனர். அதில் பழனிசாமி, 28-ந்தேதி மாலை ரஞ்சித்குமார் என்பவரிடம் இருந்து தனக்கு தரவேண்டிய பணத்தை வாங்க செல்வதாக கூறி சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்து இருப்பதும் தெரிந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலையூர் கஸ்பாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் (27), மாரிமுத்து (38) ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டில் மறுநாள் சரண் அடைந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அதில், கொலையான பழனிசாமிக்கு மதுரையை சேர்ந்த மந்திரவாதி ரஞ்சித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ரஞ்சித்குமார், அகரம் பகுதியில் கோவில் கட்டி, அங்கு குறி சொல்லி வருவதுடன், பில்லி சூன்யம் எடுப்பதாக கூறிவந்துள்ளார். அவர் சொன்னது நடக்கும் என நம்பியதால் பழனிசாமி, மந்திரவாதி ரஞ்சித்குமார் கடனாக பணம் கேட்கும்போதெல்லாம் லட்சக்கணக்கில் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பழனிசாமிக்கு பணநெருக்கடி ஏற்பட்டதால் மந்திரவாதி ரஞ்சித்குமாரிடம் தான் கடனாக கொடுத்த பணத்தை திரும்பகேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் ரஞ்சித்குமார் பணத்தை கொடுக்காததுடன், பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்த பழனிசாமியை கொலை செய்யவும் திட்டமிட்டார்.

சம்பவத்தன்று பணத்தை கேட்டு ரஞ்சித்குமாரை கோவிலில் பழனிசாமி சந்தித்தார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரஞ்சித்குமார், பழனிசாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை அங்கிருந்து கொண்டு வந்து அவரது காருக்குள் வைத்து உள்ளனர்.

இதற்கு அவரது நண்பர்களான முருகானந்தம், பழனிசாமியின் முன்னாள் கார் டிரைவர் ராஜேஷ்(29), கஸ்பாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம், மாரிமுத்து ஆகியோர் உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பழனிசாமியின் முன்னாள் கார் டிரைவரான ராஜேஷ் என்பவரை சேலையூர் போலீசார் முடிச்சூர் அருகில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மந்திரவாதி ரஞ்சித்குமார் மற்றும் முருகானந்தம் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story