“நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே ஊக்குவிக்கிறார்கள்” ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை


“நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே ஊக்குவிக்கிறார்கள்” ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 10:45 PM GMT)

நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கோபிகண்ணன். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். அரசுத்துறையில் காவலராக நியமனம் செய்யப்பட்ட இவர், கடந்த 2014-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை ரத்து செய்து மீண்டும் தனக்கு பணி வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மாற்றுத்திறனாளியான நான் பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் இரவு காவலாளி பணியில் சேர்ந்தேன். இங்கு தொடர்ந்து பணியாற்றி வந்தேன். என்னை திடீரென பணி நீக்கம் செய்தனர். எனது பணிநீக்கத்தை ரத்து செய்து, நிரந்தர பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் நம் நாட்டை சேர்ந்தவர்கள் சாதிக்க முடியும். ஆனால் இங்கு கிரிக்கெட் வீரர்களை மட்டுமே ஊக்குவிக்கின்றனர். இந்த நாடு திருந்தவே திருந்தாதா? என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.

விசாரணை முடிவில், வருகிற 15-ந்தேதிக்குள் மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்கி, அதுதொடர்பான அறிக்கையை அடுத்த நாள் (அதாவது 16-ந்தேதி) கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story