காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜி.கே.வாசன்


காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 7:08 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில் த.மா.கா. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜி.கே.வாசன் கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. கூட்டணியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். த.மா.கா. தேர்தல் அறிக்கையை நேற்று ஜி.கே.வாசன் வெளியிட அதனை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பெற்றுக்கொண்டார்.

அப்போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்மூப்பனார், பி.எல்.ஏ.சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் ரத்து செய்ய வலியுறுத்தப்படும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பதில் புதிய அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

மேதாது அணையின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய இடு பொருட்கள் மற்றும் உரம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவையாறில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும். தஞ்சை-அரியலூர் ரெயில்பாதை அமைக்கும் திட்டம் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர்-திருவையாறு-தஞ்சை-பட்டுக்கோட்டை வழியாக அமைய இருக்கும் ரெயில்வே பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பேராவூரணி பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். ஒரத்தநாடு ஏரி புனரமைத்து படகு வசதி செய்யப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்பன உள்பட 114 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்றார்.

Next Story