பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே ரெயில் சேவை தொடங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு


பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே ரெயில் சேவை தொடங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 April 2019 10:15 PM GMT (Updated: 6 April 2019 7:37 PM GMT)

பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து அதிவேக சிறப்பு ரெயில் சோதனை ஒட்டம் முடிவடைந்துள்ளதால் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டை,

ஆங்கிலேயர் ஆட்சியின் போது தென்னிந்திய ரெயில்வே நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட காரைக்குடி- மயிலாடுதுறை ரெயில்பாதையில் கடந்த 1902-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இது தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 2-வது ரெயில் பாதையாகும். மீட்டர்கேஜ் பாதையாக இருந்த இந்த வழித்தடத்தை அகல ரெயில் பாதையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் காரைக்குடி முதல் திருவாரூர் வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இந்தநிலையில் பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை உள்ள 75 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதையில் கடந்த 29-ந் தேதி

அதிவேக சிறப்பு ரெயில் மூலம் தெற்கு ரெயில்வே பெங்களூரு வட்ட ஆணையர் மனோகரன் ஆய்வு நடத்தினார். இதைத்தொடர்ந்து விரைவில் காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக, திருவாரூர் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு செல்லலாம் என்று பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் ரெயில் சோதனை ஓட்டம் நடத்திய தெற்கு ரெயில்வே ஆணையர் ரெயில் இயக்க சில நிபந்தனைகளை விதித்து உள்ளார்.

இதில் பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கலாம். பட்டுக்கோட்டையிலிருந்து தில்லைவிளாகம் ரெயில் நிலையம் வரை 75 கிலோ மீட்டர் வேகத்திலும் தில்லைவிளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களை இயக்கலாம். பயணிகள், ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன் அன்றாட பராமரிப்புகளுக்குத் தேவையான பணியாளர்களை அனைத்து நிலைகளிலும் நியமித்திருக்க வேண்டும். தெற்கு ரெயில்வேயின் கட்டுமான பிரிவு, ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், சிக்னல் வசதிகள், நிரந்தரமான ரெயில் பாதை அமைப்பு என அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து

திருப்திகரமான நிலையில் திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகத்துக்கு பயணிகள் ரெயில் இயக்க பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரெயில்வே ஆணையரின் நிபந்தனைகள் நிறைவேற 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த நிபந்தனைகளை சற்று தளர்த்தி ரெயில்சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story