தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை


தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2019 10:15 PM GMT (Updated: 10 April 2019 6:49 PM GMT)

ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள பழமையான மருத்துவக்கல்லூரிகளில் தஞ்சை மருத்துவக் கல்லூரியும் ஒன்று. தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை பட்டப்படிப்பு, செவிலிய படிப்புகளும் உள்ளன. மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 8 விடுதிகள் உள்ளன. இவற்றில் 900 மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இளநிலை மருத்துவம் நான்காம் ஆண்டு படிக்கும் 14 மாணவர்கள், 5 பயிற்சி டாக்டர்கள் உள்பட 19 மாணவர்கள் நேற்று இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, விடுதியில் மாணவர்கள் சிலர் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மது அருந்தி தகராறு செய்தனர். இவர்களை 3 முறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி 19 மாணவர்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை கல்லூரிக்கு வரக்கூடாது என்றனர்.

Next Story