எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரி சோதனை: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது காதர் மொய்தீன் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரி சோதனை: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது காதர் மொய்தீன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 7:52 PM GMT)

எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று காதர் மொய்தீன் கூறினார்.

திருச்சி,

இந்தியாவை மதச்சார்புடைய நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும் பாரதீய ஜனதாவை அப்புறப்படுத்தும் தேர்தல் இதுவாகும். மோடி அரசு அனைத்து வகையிலும் தோல்வி கண்டுள்ளது. மக்களை ஏமாற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து விதத்திலும் பாரதீய ஜனதா தோல்வியுற்ற கட்சி ஆகும். அதற்கு பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையே உதாரணமாக உள்ளது.

2014-ல் கூறிய அத்தனையும் இந்த தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ராமர் கோவில் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் ராமர் கோவில் கட்டுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது கோர்ட்டை உதாசீனப்படுத்துவது ஆகும். அதுவும் கோவில் கட்டுவது அரசு வேலை அல்ல.

ரபேல் விமான ஊழல் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளது. அதுவும் பத்திரிகைகளில் வெளிவந்த சம்பந்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதன் மூலம் பத்திரிகை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், தமிழகத்தில் நடக்கிற 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும். மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சியும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் முற்போக்கு ஆட்சியும் அமையும். காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் உலக அளவில் தலை சிறந்தது. ஆனால், வருமானவரி அதிகாரிகளை தூண்டி எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக, பாரபட்சமாக செயல்படுறது. தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கையெழுத்திட்ட புகார் மனுவை ஜனாதிபதியிடம் அளிக்க இருக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story