தமிழக மக்கள் புதிய அரசியல் தலைவரை தேட வேண்டும் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு


தமிழக மக்கள் புதிய அரசியல் தலைவரை தேட வேண்டும் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 11 April 2019 11:15 PM GMT (Updated: 11 April 2019 8:37 PM GMT)

60 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமிழக மக்கள் புதிய அரசியல் தலைவரை தேடவேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.

திருச்சி,

திருச்சி கீழப்புதூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

ராகுல்காந்தி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் தருவேன் என்கிறார். மோடி விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் போடுவேன் என்கிறார். பசியை தற்காலிகமாக நீக்குகிறவன் தலைவன் அல்ல. நிரந்தரமாக எவன் நீக்குகிறானோ அவன் தான் நிரந்தரமான தலைவன். நாங்கள் வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என பசப்பான வார்த்தைகளை பேசி நமது வாக்குகளை பறிக்கிறார்கள். அதனை கேட்டு ஏமாந்து விடாதீர்கள். பிரதமர் மோடி தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் 6 ஆயிரம் ரூபாயை போட்டு முடிக்காமல் விட்டது ஏன்? உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சி காலத்தில் செய்து முடித்து இருப்பார்கள்.

பெற்ற தாய் தனது குழந்தைக்கு எப்படி குறிப்பறிந்து பாலூட்டுவாளோ அதைப்போன்று தன் தேசத்து குடிமக்களுக்கு எவன் சேவை செய்கிறானோ அவனை இந்த தேசம் போற்றி புகழும் என்று தமிழ் மக்களின் வேதமான திருக்குறள் கூறி இருக்கிறது. அப்படி ஏதாவது இந்த நாட்டில் நடந்து இருக்கிறதா?. நான் விவசாயத்தை அரசு தொழிலாக்கி எல்லோருக்கும் வேலை கொடுப்பேன் என்றால் சிரிக்கிறார்கள். பொறியியல் படித்து விட்டு 20 லட்சம் இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். ஆடு, மாடு வளர்ப்பதை அரசு பணியாக்கி வேளாண் பண்ணைகள் அமைத்தால் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியும். பி.எஸ்சி, எம்.எஸ்சி. படித்து விட்டு அரசு டாஸ்மாக்கில் வேலை பார்ப்பதை விட ஆடு மாடு மேய்ப்பது மோசமான தொழில் அல்ல.

தொழில் துறையில் இந்தியாவின் கட்டமைப்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது. இந்தியா கூறும் வளர்ச்சி என்பது கொடுமையான ஒரு மாய காட்சி, பிம்பம். நாங்கள் கூறும் வேலை வாய்ப்பு கட்டமைப்பு என்பது உலகிற்கே வழிகாட்டுவதாக அமையும். நாம் தமிழர் கட்சி பேசும் அரசியல் தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய நாட்டு மக்களுக்காக மட்டும் அல்ல, உலகின் பொதுமைக்கான அரசியலை எடுத்து வைக்கிறோம்.

நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து நாங்கள் வேலைவாய்ப்பு கொடுப்போம். நீர், பயிர், உயிர், அறிவு, வளர்ச்சி, கல்வி தான் எங்களது திட்டம். நாங்கள் ஆள்மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படை கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறோம். இப்போது இருக்கிற கட்டமைப்பை தகர்க்க வேண்டும். புதிய கல்வி முறையை நாங்கள் கொண்டு வருவோம். கல்வி தேசத்தின் குடிமக்களுக்கு புதுமையாக இருக்கவேண்டும். மருத்துவத்தை உலக தரத்திற்கு இணையாக உயர்த்துவோம். எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சருக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறவேண்டும் என சட்டம் இயற்றுவோம். தண்ணீர் விற்பனைக்கு தடை போடுவோம். நீர்வளத்தை பெருக்குவோம்.

நம்நாட்டின் பொருளாதார கொள்கை வாடகை தாய் பொருளாதார கொள்கையாக இருக்கிறது. இது வளராது, வாழாது. இந்தியா ஒரு சந்தை இது குடிமக்களுக்கான நாடு அல்ல. இது முதலாளிகளுக்கான தேசம். சந்தையில் வர்த்தகம் நடக்குமா? வாழ்க்கை நடக்குமா? என சிந்தித்து பார்க்கவேண்டும். வியாபாரம் முடிந்ததும் வியாபாரி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விடுவான். அது தான் இப்போது நடக்கிறது.

நமது நாடு எத்தியோப்பியாவாக மாறாமல் இருக்கவேண்டும் என்றால் சரியான தலைவனை தேர்ந்தெடுத்து வாக்களிக்கவேண்டும். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகள் உங்களுக்கு என்ன செய்தன. எனவே, அவர்களை ஒதுக்கிவிட்டு புதிய அரசியல் தலைவரை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல பொருட்களை தேடி சென்று வாங்குவது போல் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்கும் நல்ல தலைவரை தேடி சென்று தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Next Story