தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து


தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து
x
தினத்தந்தி 11 April 2019 9:45 PM GMT (Updated: 11 April 2019 10:06 PM GMT)

தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

தாளவாடி, 

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தில் தேங்காய் நார் மில் உள்ளது. இங்கு 8-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று மதியம் வழக்கம்போல் மில்லின் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மில்லின் மற்றொரு பகுதியில் குவிக்கப்பட்டு இருந்த நார் கழிவுகளில் புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்த மின்மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து நார் கழிவுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தொழிலாளர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. உடனே அணைக்கப்பட்டதால் தீ மற்ற இடங்களுக்கு பரவவில்லை. இதன் காரணமாக பெரும் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Next Story