பனித்திட்டு அருகே நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்தது; 5 மீனவர்கள் உயிர் தப்பினர்


பனித்திட்டு அருகே நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்தது; 5 மீனவர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 April 2019 12:07 AM GMT (Updated: 13 April 2019 12:07 AM GMT)

மீன் பிடிக்கச் சென்றபோது பனித்திட்டு அருகே நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 5 மீனவர்கள் உயிர் தப்பினர்.

பாகூர்,

வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காட்டாண்டி (வயது 50), செங்கேணி (42), சித்திரவேல் (38), மூர்த்தி (51), உதயா (45) ஆகிய 5 பேர் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நரம்பை பனித்திட்டு அருகே அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படகில் திடீரென ஓட்டை விழுந்தது. அதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஓட்டையை மீனவர்கள் அடைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் ஓட்டை வழியாக கடல் நீர் படகுக்குள் புகுந்தது. அதன் காரணமாக ஒரு பக்கமாக சரிந்து மூழ்கத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் படகில் இருந்து கடலில் குதித்து கரையை நோக்கி நீந்தி, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் பூரணாங்குப்பம்-புதுக்குப்பம் கடற்கரையில் கரை சேர்ந்தனர். அதேபோல் அவர்களின் படகும் சேதமடைந்த நிலையில் அதே பகுதியில் சிறிது தூரத்தில் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தில் படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். நடுக்கடலில் படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

Next Story