மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதன் மூலம் விலைவாசி உயர்வை சரி செய்வோம் - நாராயணசாமி உறுதி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதன் மூலம் விலைவாசி உயர்வை சரி செய்வோம் - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 14 April 2019 11:30 PM GMT (Updated: 14 April 2019 8:31 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதன் மூலம் விலைவாசி உயர்வை சரி செய்வோம் என்று தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி கூறினார்.

பாகூர்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, தனவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று கூட்டணி கட்சியினருடன் பாகூர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து ‘கை’ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். சுமார் 30 கிராமங்களில் தொண்டர்கள் புடைசூழ வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தனர். காட்டுக்குப்பத்தில் தொடங்கிய பிரசாரம் கடுவனூரில் முடிவடைந்தது.

அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது;–

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், மோடி பிரதமரா? அல்லது ராகுல் காந்தி பிரதமரா? என தேர்வு செய்யும் தேர்தல். மோடியின் பா.ஜ.க. அரசு, புதுச்சேரியை புறக்கணித்துள்ளது. திட்டங்களை நிறைவேற்ற கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

கவர்னர் கிரண்பேடி மூலமாக, மத்திய அரசு பல தொல்லைகளை கொடுத்தது. புதுச்சேரி மாநிலத்தில் முதியோர் பென்‌ஷன், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க விடவில்லை. இலவச அரிசிக்கு கோப்புகளை அனுப்பினால், கவர்னர் அதனை திருப்பி அனுப்பி, அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என்கிறார். கூட்டணி கட்சியினருடன் நாம் போராட்டத்தில் ஈடுபட்ட பின் இலவச அரிசி வழங்கிட கவர்னர் ஒப்புக்கொண்டார்.

என்.ஆர்.காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினரை சமாளித்து புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும், நாம் நிறைவேற்றி வருகிறோம். ராகுல் காந்தி பிரதமராக வந்தால், தாய்மார்கள் சுபிட்சமாக இருக்க முடியும். ராகுல் காந்தி பிரதமரானால், தாய்மார்களின் வங்கி கணக்கில் மாதம் 6 ஆயிரம் ரூபாய், அதாவது ஆண்டிற்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி உள்ளார்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம், நீட் தேர்வு ரத்து, தனி மாநில அந்தஸ்து வழங்குவதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார். மத்திய காங்., ஆட்சியில் சமையல் எரிவாயு 375 ரூபாயாக இருந்தது. ஆனால், பா.ஜ. ஆட்சியில் இன்றைக்கு 975 ரூபாயாக உள்ளது. அதேபோல் காங்., ஆட்சியில் 60 ரூபாயாக இருந்த பெட்ரோல், தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. யால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதையெல்லாம் சரி செய்திட, நீங்கள் காங்., வேட்பாளர் வைத்திங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்கு அளித்திட வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

பிரசாரத்தின் போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது;–

நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் தேர்தலுக்காக அல்ல, நமது எதிர்காலத்திற்கும், இந்திய நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயப்பதற்கு தான். நாம் அளிக்கும் வாக்கு, நமது குடும்பத்தையும், நமது சந்ததியினரையும் காப்பாற்றும் வாக்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் காங்., அரசு பொறுப்பேற்ற உடன், 22 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. மத்திய அரசு பல தொல்லைகளை கொடுத்தாலும், அதனை மீறி பல நல திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அதற்காக, எங்களுக்கு, ஆட்சியை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி தான் கவலை.

நமது எதிரிகள் நம்மை வாழவிடக் கூடாது என்ற முடிவில் உள்ளனர். ஆனால், நாம் அவர்களுக்கு சவால் விடும் வகையில் வாழ்ந்து காட்டுகிறோம். எனவே, நமது வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்குகள் அளித்து அவரை வெற்றி பெற செய்திட வேண்டும். அதன் மூலமாக, வைத்திலிங்கம் மத்திய மந்திரியாக பாராளுமன்றத்தில், நமக்காக குரல் கொடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது;–

மோடியா, ராகுல் காந்தியா, இதில் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் தான் இது. மோடி, ஒரு சில பணக்காரர்களின் நன்மைக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி, ஏழை, நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி பிரதமரானால் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

நம்முடைய குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டும் என்றால், கை சின்னத்திற்கு வாக்கு அளிப்பது தான் ஒரே வழி. பெட்ரோல், டீசல் விலை இந்த ஆட்சியில் உச்சத்திற்கு சென்றுள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி, இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ராகுல் காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே முடியும்.

எனவே, நடைபெற உள்ள தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டுகள் போட்டு வெற்றி பெற செய்திட வேண்டும்.

இவ்வாறு வைத்திலிங்கம் பேசினார்.


Next Story