நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆலோசனை
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:54 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தமிழக டி.ஜி.பி. (தேர்தல்) அசுதோஷ் சுக்லா ஆகியோர் காணொலி காட்சி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது;-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் சேவை மையங்கள், மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் அரசியல் கட்சியினரின் பிரசாரங்களை கண்காணித்து, செலவு விவரங்களை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்தல் மற்றும் மாவட்டத்தில் பண பரிவர்த்தனைகளை முழுமையாக கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்று, பல்வேறு கட்டங்களாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையின் போது வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் அனைத்துத்தரப்பு வாக்காளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. குறிப்பாக மாற்றுத்திறனாளிக்களுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலிகள், அவர்களுக்கான உதவியாளர்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது. வாக்குச்சாவடிக்குள் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதையும், தடைபடாத மின்சார வசதியை உறுதி செய்யப்பட்டு உள்ளது குறித்தும் கேட்டறியப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story