ராமநவமி-தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ராமநவமி-தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 9:04 PM GMT)

ராமநவமி- தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ராமநவமியையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமர்கோவில்

இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே டி.என்.பி.எல். காகித ஆலை குடியிருப்பில் உள்ள ராமர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசிமாலைகளால் அலங்காரம் செய்து திருமஞ்சனம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. பின்னர் அதே வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

முருகன்கோவில்

தமிழ்புத்தாண்டையொட்டி புகழிமலையில் உள்ள முருகனுக்கு பால், பழம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் முருகன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதேபோல் மகாமாரியம்மன், நாணப்பரப்பு மாரியம்மன், அய்யப்பன்கோவில், கடைவீதி விநாயகர் கோவில், நன்செய்புகளூர் மேகபாலீஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை

குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் நேற்று காலை உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு (கண்ணாடி அறை சேவை) கண்ணாடி அறையில் சுவாமிகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். அங்கு பெருமாள் குறித்த பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை தமிழ்புத்தாண்டையொட்டி கொடிமரத்தின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். கோவிலில் தமிழிசை விழா நடந்தது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறுவர், சிறுமிகள் தேவார பாடல்கள் பாடினர். மேலும் மங்கள இசை, வீணை வாசிக்கப்பட்டன.

இதேபோல தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், சின்ன ஆண்டாங்கோவில் அண்ணா சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவில், வெண்ணைமலை முருகன்கோவில், கரூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story