வீடுகளை காலிசெய்ய சொல்லி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வீடுகளை காலிசெய்ய சொல்லி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 7:53 PM GMT)

வீடுகளை காலிசெய்ய சொல்லி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் திடீர்குப்பம், முத்தோப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். அவர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் முத்தோப்பு, திடீர்குப்பம் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டியும், அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றும் நகராட்சிக்கு உரிய வரி செலுத்தி வருகிறோம்.

இந்நிலையில் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த 3 பேர் எங்களிடம் வந்து, நாங்கள் குடியிருக்கும் இடம் தங்களுக்கு பாத்தியப்பட்டவை என்று போலியான ஆவணம் தயாரித்து எங்கள் அனைவரிடமும் தலா ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி மிரட்டி வருகிறார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகளை காலிசெய்து விடுவோம் என்று அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். எனவே தாங்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story