தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: கரூரில் துணை ராணுவ படையினர் - போலீசார் கொடி அணிவகுப்பு


தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: கரூரில் துணை ராணுவ படையினர் - போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 8:46 PM GMT)

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி கரூர் நகரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு 1,031 வாக்குச்சாவடி மையங்களில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்குகிற வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு வாக்களிக்க வரிசையில் ஆட்கள் இருந்தால் டோக்கன் வழங்கப்பட்டு அனைத்து வாக்குகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்பட 11 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். மாறாக பூத் சிலிப்பினை வைத்து மட்டும் வாக்களிக்க இயலாது.

தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் தயாராக இருக்கின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை என 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்களில் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி முடிக்கப்பட்டு அங்குள்ள அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் அதிகாரி முன்னிலையில் மட்டும் தான் அந்த எந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நாள் அன்று எடுத்து வர முடியும்.

கரூரில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 பேலட் யூனிட்டுகள் வைக்கப்படுகின்றன. பேலட் யூனிட்டிலுள்ள பொத்தானை அழுத்தி வாக்களித்ததும், அதன் அருகேயுள்ள வி.வி.பேட் எந்திரத்தில் தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 வினாடிகளுக்குள் பார்த்து கொள்ளலாம். ஒரு வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் 3 நிலை வாக்குப்பதிவு அலுவலர்கள் என்கிற நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது, வாக்காளரின் ஆவணங்களை சரிபார்ப்பது, விரலில் மை வைப்பது, பின்னர் கண்ட்ரோல் யூனிட்டை கண்காணிப்பில் வைத்திருப்பது என்பன உள்ளிட்ட பணிகளை அவர்களுக்கு பிரதானமாக பாாக்கின்றனர். வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கரூர் மாவட்டத்தில் 69 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு காலசூழலை புரிந்து கொண்டு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக மேற்கு வங்காளத்திலிருந்து சிறப்பு ரெயிலில் வந்த ஒரு கம்பெனியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் (துணை ராணுவம்) 82 பேர் கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இதைத்தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 152 போலீசார் சென்னையில் இருந்து கரூருக்கு வந்துள்ளனர். இதே போல் கரூர் மாவட்ட போலீசார் 850 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரும் தேர்தல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரோந்து பணி, வாகன சோதனை மற்றும் அரசியல் கட்சியினரின் பிரசாரம், கூட்டங்களை கண்காணித்தல் போன்ற பணிகளில் போலீசார் ஈடுபடுகிறார்கள்.

இன்று (செவ்வாய்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்ட கண்காணிப்பிலும் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு துணை ராணுவ படையினர், போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மிடுக்கான கொடி அணிவகுப்பு கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே நேற்று காலை நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கரூர் ஜவகர் பஜார், ஐந்துரோடு, சர்ச் கார்னர், ஆஸ்பத்திரி ரோடு வழியாக கரூர் டவுன் போலீஸ் நிலையம் வரை அணிவகுப்பு நடந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க இந்த துணைராணுவ படையினர் பணியமர்த்தப்படகின்றனர். மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியிலும் முக்கிய வீதிகள் வழியாக துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Next Story