சின்னமுட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பெண்கள் மனு


சின்னமுட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பெண்கள் மனு
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 9:28 PM GMT)

சின்னமுட்டத்தை சேர்ந்த பெண்கள் நேற்று நாகர்கோவிலுக்கு திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

சின்னமுட்டத்தை சேர்ந்த பெண்கள் நேற்று நாகர்கோவிலுக்கு திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் ஊரில் கடந்த ஆண்டு மே 10-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. பின்னர் இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி 9 மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் நாங்கள் நிம்மதியாக இருந்தோம். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் நாங்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி அச்சத்துடன் வசிக்கிறோம். மேலும் கடந்த 13-ந் தேதி எங்கள் ஊரை சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து சதி திட்டம் தீட்டி மதியழகன் மற்றும் அர்ஜூன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். அதோடு படகுகளையும் அடித்து சேதப்படுத்தினார்கள். இதே போல பீட்டர் என்பவரை தாக்கியதோடு அவரது வீட்டின் முன் நின்ற ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் படகில் ஏறி கடலுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

எனினும் பணபலத்துடனும், ஆள் பலத்துடனும் விதி முறைகளை மீறி ஊர்மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் நாங்கள் பயத்தில் உள்ளோம். எனவே சின்னமுட்டத்தில் தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story