தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:15 PM GMT (Updated: 16 April 2019 7:07 PM GMT)

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று திருவாரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது இறுதி கட்ட பிரசாரத்தை திருவாரூரில் நிறைவு செய்தார். இறுதியாக திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு, திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர். இந்த தேர் 1948-ம் ஆண்டு முதல் ஓடாமல் இருந்தது. அதனை கருணாநிதி தான் மீண்டும் ஓட நடவடிக்கை எடுத்தார். நான் இந்த திருவாரூரில் இருந்து கடந்த 20-ந் தேதி எனது பிரசாரத்தை தொடங்கினேன். தேர் புறப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் நிலையை அடைந்தால் தான் மரியாதை. அதே போலத்தான் நான் பிரசாரம் தொடங்கிய இடத்தில் நிறைவு செய்வதற்காக வந்துள்ளேன். திருவாரூர் கருணாநிதி பிறந்த மண்.

நான் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வந்துள்ளேன். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். நாளை நமதே, நாற்பதும் நமதே. நான் சென்ற இடத்தில் எல்லாம் எங்கு பார்த்தாலும் மக்கள் எழுச்சி, ஆர்வத்துடன் உள்ளனர். இதேபோல் 18 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மே 19-ந் தேதி நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் என 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

அந்த வெற்றியில் திருவாரூருக்கும் பங்கு உள்ளது. திருவாரூரில் இருந்து இரண்டு முறை கருணாநிதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நம்மை விட்டு மறைந்த காரணத்தால் இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. அந்த 22 சட்டசபை தேர்தலில் திருவாரூரும் ஒன்று.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றி பெற செய்தீர்கள். அவர் 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதற்கு முடிவு எடுக்கும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அதைப் பற்றிப் பேசினால் ஸ்டாலின் இப்போது இதை பேசலாமா? எனக் கேட்கிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர். மறைந்தவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அதனால் நான் பேசுவேன் என்று சொல்ல எனக்கு தகுதி உள்ளது.

இதேபோன்று கொடநாடு பிரச்சினை. அது குறித்துப் பேசக்கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதால் நான் பேசவில்லை. ஆனால் அது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அடுத்து பொள்ளாச்சி பிரச்சினை. இந்த உலகத்திலேயே நடக்கக் கூடாத சம்பவம் நடந்துள்ளது. 200-க்கும் மேற்பட்ட பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து பணத்தை பறித்துள்ளனர். அங்கு போலீஸ் இல்லையா? ஆனால் அதற்கு யார் பின்னணியில் உள்ளனர்? ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவரின் மகன்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த மூன்று பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியும் இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை.

இந்தத் தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக இந்த மூன்று பிரச்சினை குறித்தும் உரிய விசாரணை முழுமையாக நடத்தி சம்பந்தப்பட்டவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி அவர்களை கைது செய்வது தான் என்னுடைய வேலை. இந்த மூன்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. பெண்களுக்கே இந்த நிலை.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை சொல்லி உள்ளோம். நான் தேர்தல் பிரசாரம் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கினேன் அதற்கு முதல் நாள்தான் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கான வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

Next Story