திருப்பூரில் வீட்டை காலி செய்யக்கோரி வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது


திருப்பூரில் வீட்டை காலி செய்யக்கோரி வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 9:26 PM GMT)

திருப்பூரில் வீட்டை காலி செய்யக்கோரி வாலிபர்களை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த சக்திநகர் 3–வது வீதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ரங்கநாதன் (வயது 18).இவர் வசிக்கும் அதே காம்பவுண்டில் அவருடைய மாமா முத்து (47) என்பவரும் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ரங்கநாதனை அந்த காம்பவுண்டில் இருந்து காலி செய்யுமாறு முத்து கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரங்கநாதன் அவருடைய நண்பர் ஜீவா (20) என்பவருடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற முத்து, சிவக்குமார் (32), வீரபாண்டியன் (43) ஆகியோர் சேர்ந்து ரங்கநாதன் மற்றும் ஜீவாவை தாக்கியதுடன், அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து, சிவகுமார், வீரபாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story