காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:45 PM GMT (Updated: 16 April 2019 10:51 PM GMT)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

வில்லியனூர்,

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் நேற்று இறுதிகட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வில்லியனூர் தொகுதி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை 8 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் ஜி.என்.பாளையம், சுல்தான்பேட்டை, மணவெளி, ஒதியம்பட்டு, கொம்பாக்கம், ஆத்துவாய்க்கால்பேட், உத்திரவாகிணிபேட், எஸ்.எஸ்.நகர், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க, மாநிலம் வளர்ச்சி பெற, தனிமாநில அந்தஸ்து கிடைக்க, அடித்தட்டு மக்கள் வளர்ச்சியடைய கை சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நமது வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிபெற்றால்தான் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்.

கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு நலத்திட்டங்களையும் பெரும் போராட்டத்துக்கு பின் தான் நிறைவேற்ற முடிந்தது. அப்படி இருந்தும் வில்லியனூர் தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு சாலை, குடிநீர் தொட்டிகள், மார்க்கெட் கட்டிடம் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இலவச அரிசிக்கு நீதிமன்றத்தை நாடி தேர்தல் முடிந்தவுடன் வழங்க உத்தரவு பெற்றுள்ளோம். வேலைவாய்ப்பு மட்டுமே தரமுடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்து பின், அதற்கு தடையாக உள்ள கவர்னருக்கு முடிவு கட்டிவிட்டு, முதல் வேலையாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே திருப்புமுனை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story