குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 April 2019 11:00 PM GMT (Updated: 20 April 2019 7:00 PM GMT)

குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசியவர்களை கைது செய்யக்கோரி தஞ்சை அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

குறிப்பிட்ட சமுதாயத் தினரை இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ்-அப் மூலம் பரவியது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முத்தரையர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் கீழவஸ்தாசாவடி அருகே நேற்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு முத்தரையர் சங்க மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் வேலாயுதம், நகர செயலாளர் பன்னீர், நிர்வாகிகள் வீரையன், குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story