திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை


திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2019 10:15 PM GMT (Updated: 21 April 2019 7:35 PM GMT)

திருவோணம் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள வேப்பங்காடு உக்கடையை சேர்ந்தவர் திருமேனி. இவரது மனைவி சிந்தாமணி(வயது75). திருமேனி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சிந்தாமணி வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மாலை சிந்தாமணி அவரது வீட்டின் அருகே ஒரு தென்னை மரத்தின் அடியில் தலைநசுங்கி பிணமாக கிடந்தார்.

அடித்துக்கொலையா?

இதுகுறித்து கிராமமக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிந்தாமணி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மமான முறையில் தலைநசுங்கி இறந்துகிடக்கும் மூதாட்டியை நள்ளிரவு நேரங்களில் திருட சென்ற மர்ம ஆசாமிகள் யாராவது அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story