மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து வீரர்கள் மறியல்


மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து வீரர்கள் மறியல்
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 8:30 PM GMT)

மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக் காததை கண்டித்து விளையாட்டு வீரர்கள் மறியல் ஈடுபட்டனர்.

தரகம்பட்டி,

தமிழ்நாடு இளையோர் கிராம விளையாட்டு கழகம் சார்பில் கடவூர் ஒன்றியத்தில் உள்ள 3 தனியார் பள்ளிகளில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தடகளம், வாலிபால், கோகோ உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் சிதம்பரம், சென்னை, ஊட்டி, தேனி, சேலம் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தரகம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில், விளையாட்டு கழகம் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று கூறி, ஒரு அணியின் வீரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர். இதற்கு விளையாட்டு கழகம் சார்பில் எந்த பதிலும் அளிக்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அணியின் வீரர்கள் தரகம்பட்டியில் உள்ள கரூர்-மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் எங்களது அணியில் உள்ள ஒவ்வொரு வீரர் களுக்கும் ரூ.250 வரை விளையாட்டு கழகத்தினர் வசூல் செய்தனர். ஆனால் உரிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் கட்டிய பணத்தை திரும்பி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் கூறுகையில், கால்பந்தாட்டத்தில் 11 பேர் இருக்க வேண்டும். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்களின் அணியில் 7 பேர் மட்டுமே இருந்தனர். இருந்தாலும் நாங்கள் 7 பேருடன் விளையாடுகிறோம் என்று அவர்கள் கூறினர். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதனால் அந்த அணியினர் அடிப்படை வசதிகள் இல்லை என காரணம் காட்டுகின்றனர் என்றனர். இதையடுத்து அந்த அணியினர் கட்டிய பணத்தை மட்டும் விளையாட்டு கழகம் திருப்பி கொடுத்தது. இதையடுத்து அந்த அணி வீரர்கள் மட்டும் விளையாடாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

Next Story