பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 22 April 2019 7:46 PM GMT)

பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல குடும்ப பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் மிரட்டல்களுக்கு பயந்து தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் புகார் கொடுக்காமல் உள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, இந்த சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்களை வெளிவராமல் ரகசியம் காக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் தடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பெண்களை மானபங்கப்படுத்துதல் மற்றும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்துதல், ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story