தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்


தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 8:10 PM GMT)

தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கான தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

தொடக்கக்கல்வி பட்டய தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள வழி விண்ணப்பத்தையும், பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். அதனை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்த தேர்வரே நேரில் சென்று செலுத்தலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

செலுத்த வேண்டும்

தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால்வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணங்களாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்திற்கு) ரூ.50 செலுத்த வேண்டும்.

இதேபோல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டய தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ- மாணவிகள், அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலமாகவும் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story