திருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


திருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 8:13 PM GMT)

திருமானூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் தெரு மற்றும் பள்ளிக்கூட தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சிவன் கோவில் தெரு அருகே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் அருகில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று ஊரின் மேற்குபுறம் உள்ள தெருக்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நேரமாக இருந்ததால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினருடன் ஒன்று சேர்ந்து கோவிலூரில் உள்ள சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதி மக்கள் இந்த தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைத்துத்தர வேண்டும் என்றும், ஒரு தனிப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தண்ணீர் இணைப்பு வைத்து உபயோகப்படுத்தி வருகின்றனர் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இன்றுக்குள் (அதாவது நேற்று) இந்த ஆழ்குழாய் கிணற்று மின் மோட்டாரை சரி செய்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என்றும், மின்விளக்கு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் இணைப்பு செயல்பட்டு வருவதை நாளைக்குள் (அதாவது இன்று) சரி செய்து தருகிறோம் என்றும் உறுதியளித்தனர்.

இதையடுத்து ஆழ்குழாயில் பொருத்தப்பட்டு இருந்த மின்மோட்டார் உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு சரிசெய்ய கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story