அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 8:31 PM GMT)

அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரி ஆவுடையார் கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவுடையார்கோவில்,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதை யடுத்து இந்த ஆடியோவை வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆவுடையார் கோவில் அருகே உள்ள கரூர் கடைவீதி கரூர்-கண்ணங்குடி சாலை முக்கத்தில் வாட்ஸ்-அப்பில் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யக்கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறக்கோரியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கரூர்-கண்ணங்குடி சாலை முக்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story