மாமல்லபுரத்தில் மாயமான பெண் பிணமாக கிடந்தார் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


மாமல்லபுரத்தில் மாயமான பெண் பிணமாக கிடந்தார் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 9:15 PM GMT)

மாமல்லபுரத்தில் மாயமான பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பழைய சிற்ப கலைக்கல்லூரி சாலையில் வசித்து வந்தவர் சங்கரநாராயணன் (வயது 42). மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பிரசாத கடை வைத்திருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இவரது மனைவி சுனிதா (32). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் இறந்த துக்கத்தில் தனிமையில் வசித்து வந்த இவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். கணவர் இறந்ததால் எந்தவித வருமானமும் இன்றி வறுமையில் வசித்து வந்தார். இவரது கணவர் சங்கரநாராயணனிடம் திருவிடந்தை கோவிலில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் ரூ.40 லட்சம் கடன் வாங்கி ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் சுனிதா மிகவும் மனம் நொந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தலசயனபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சுனிதா திடீரென மாயமானார். சங்கர நாராயணனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திலும் இதுகுறித்து புகார் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாயமான சுனிதா மாமல்லபுரம் அருகே உள்ள எச்சூர் காட்டில் உள்ள முட்புதரில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. எனவே இறந்து பல நாட்கள் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது.

இவரை யாராவது கடத்தி கொலை செய்தனரா? அல்லது கணவர் இறந்த விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கிறார்.

Next Story