புதுப்பேட்டையில், முத்துமாரியம்மன் கோவில், செல்போன் கடையில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


புதுப்பேட்டையில், முத்துமாரியம்மன் கோவில், செல்போன் கடையில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 April 2019 9:49 PM GMT (Updated: 22 April 2019 9:49 PM GMT)

புதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில், செல்போன் கடையில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோவில் எதிரில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள், அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, கோவிலை பார்வையிட்டு பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல் கோட்லாம்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு இருந்த 4 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, திருட்டு நடந்த கடையை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். முத்துமாரியம்மன் கோவில் மற்றும் செல்போன் கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வரு கின்றனர்.

Next Story