வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 8:54 PM GMT)

வளநாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள அயன்பொருவாய் ஊராட்சிக்குட்பட்ட அயன்பொருவாய், சொக்கம்பட்டி, கிழக்கு காடு, வடக்குகளம், பாறைக்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி நிர்வாகத்திடமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் காவிரி குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை அயன்பொருவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு காவிரி குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக காவிரி குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story