டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனது கடமையை சரியாக செய்வார் ஜி.கே.வாசன் பேட்டி


டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனது கடமையை சரியாக செய்வார் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 8:22 PM GMT)

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனது கடமையை சரியாக செய்வார் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் வாழைத்தார் குறிப்பாக நேந்திரம் வாழைத்தார் விலை மிகவும் குறைந்து போய்விட்டது. வாழை விவசாயிகளின் நலன் கருதி ஒரு கிலோ வாழைத்தார் விலையை ரூ.60 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் 5 கோடி மக்கள் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையை தான் நம்பி இருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக மாநில அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று த.மா.கா. விவசாய அணி கோரிக்கை வைத்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட வேண்டும்.

ஒரு பொது நல வழக்கில் மதுரை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்கள் இனி ‘நீட்’ தேர்வினை தமிழகத்திலேயே எழுதலாம் என்று அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

குழந்தை கடத்தல், குழந்தை திருட்டு போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றால் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும். குழந்தைகளை கடத்துபவர்கள், திருடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதில் உள்ள நடைமுறைகளை ஒரு குழு அமைத்து எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வகையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எனவே அவர்களது வெற்றி பிரகாசமாக உள்ளது. வட இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாக தெரிகிறது.

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சட்டமன்ற சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையில் சட்டமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். சட்டமன்றம் உண்மை நிலைக்கு ஏற்றவாறு சரியான முடிவு எடுக்கும். சபாநாயகர் தனது கடமையை முறையாக செய்து தீர்ப்பு அளிப்பார். இந்த பிரச்சினையை நான் சட்டப்பிரச்சினையாக தான் பார்க்கிறேன். அரசியல் பிரச்சினையாக பார்க்கவில்லை. நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். முதல் கட்டமாக மே 2-ந்தேதி சூலூர், 4-ந்தேதி அரவக்குறிச்சி, 9-ந்தேதி மீண்டும் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்கிறேன். 4 நாள் இடைவெளிக்கு பின்னர் 13-ந்தேதி இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறேன். அன்றைய தினம் சூலூரிலும், 15-ந்தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும், 16-ந்தேதி மதுரை திருப்பரங்குன்றத்திலும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் த.மா.கா. அமைச்சரவையில் சேருமா? என கேட்கிறீர்கள். அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் மாபெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அப்படி இருக்கும்போது எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜி.கே.வாசன் த.மா.கா. மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல் (மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு), மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Next Story