துறையூர், தொட்டியம் அருகே குடிநீர் வழங்கக்கோரி 3 இடங்களில் சாலை மறியல்


துறையூர், தொட்டியம் அருகே குடிநீர் வழங்கக்கோரி 3 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 April 2019 10:45 PM GMT (Updated: 29 April 2019 8:51 PM GMT)

துறையூர், தொட்டியம் அருகே குடிநீர் வழங்கக்கோரி 3 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

துறையூர்,

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டு பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வழங்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன், துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் பாலக்கரையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

துறையூரை அடுத்த கோட்டாத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கோட்டாத்தூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் துறையூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக, அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொட்டியம் அருகே உள்ள நத்தத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளுக்கும், விவசாய பயன்பாட்டிற்கும் போதிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக இப்பகுதியில் குடி நீரும் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆகவே, சீரான மின்சாரம் வழங்கி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நத்தம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தொட்டியம் ஒன்றிய ஆணையர்(கிராம ஊராட்சி) ரவிச்சந்திரன், மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக தொட்டியம்-காட்டுப்புத்தூர் சாலையில் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story