தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி


தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 10:27 PM GMT)

மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சில தினங்களாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தங்கிய விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை 4.30 மணி அளவில் தனியார் விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியுள்ள அறை மட்டும் இல்லாமல் அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான காரிலும் சோதனை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

சோதனையின் முடிவில் பணமோ, பொருளோ எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது தங்க தமிழ்ச்செல்வன் வெளியே சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story