தஞ்சை பகுதிகளில் 700 ஏக்கரில் கரும்புகள் காயும் அவலம் வெட்டப்பட்ட கரும்புகளும், வயலில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு


தஞ்சை பகுதிகளில் 700 ஏக்கரில் கரும்புகள் காயும் அவலம் வெட்டப்பட்ட கரும்புகளும், வயலில் கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 14 May 2019 3:42 PM GMT)

தஞ்சை பகுதிகளில் 700 ஏக்கரில் கரும்புகள் வெட்டப்படாமல் காய்ந்து வருகிறது. வெளிஆலை கரும்புகள் அரவைக்கு வருவதால், இந்த கரும்புகள் வெட்டப்படவில்லை. ஏற்கனவே வெட்டப்பட்ட கரும்புகளும் வயலில் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர உளுந்து, எள், நிலக்கடலை, மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கரும்புகள், தஞ்சை குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் 2 தனியார் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றில், குருங்குளம் சர்க்கரை ஆலையில் முன்பு 4½ லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் கரும்பு அரவை 2½ லட்சம் டன்னாக குறைந்தது.


ஆனால் தற்போது அதுவும் ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது என்பது மிகுந்த வேதனையாக உள்ளதாக தெரிவித்த விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைப்பருவம் அக்டோபர், நவம்பர் மாதத்தில் தொடங்க வேண்டும். ஆனால் கடந்த ஜனவரி மாதம் தான் அரவைப்பருவம் தொடங்கியது. தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

பல்வேறு பகுதிகளில் கரும்புகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் ஒரத்தநாடு, மருங்குளம், கண்டிதம்பட்டு, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 700 ஏக்கர் வரை கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளன. வெட்டும் காலம் கடந்து விட்டதால் இந்த கரும்புகள் வயல்களில் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது ஆலையில் அரவை முழு வீச்சில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. எந்திரங்கள் பழுது காரணமாகவும், தற்போது வெளி ஆலைகளில் உள்ள கரும்புகள் இங்கு அரவைக்கு வருவதால், குருங்குளம் சர்க்கரை அலைக்கு பதிவு செய்த கரும்புகள் காய்ந்து வருகின்றன.


இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘குருங்குளம் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் முன்பு 15 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்ட கரும்பு 6 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. தற்போது மேலும் குறைந்து 3 ஆயிரம் ஏக்கராகி விட்டது. இதுவரை பல்வேறு பகுதிகளில் கரும்பு வெட்டப்பட்டு அரவை செய்யப்பட்டாலும், ஒரத்தநாடு, மருங்குளம், நடுவூர், ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 700 ஏக்கர் வரை கரும்பு இன்னும் வெட்டப்படாமல் உள்ளது.

வெட்டும் காலம் கடந்து 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் கரும்புகள் காய்ந்து, அதன் எடை குறைந்து வருகிறது. வெட்டுக்கூலி அதிகரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையும் வழங்கப்படாமல் உள்ளது.


தற்போது கரும்புகள் வெட்டுவதற்கு 10 எந்திரங்கள் வந்துள்ளன. ஆனால் ஆலையில் அரவை சரியாக நடைபெறாததாலும், வெளி ஆலைக்கு சொந்தமான கரும்புகள் அரவை செய்யப்படுவதாலும் இங்குள்ள கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளது. பெரம்பலூர், மதுரை, திருச்சி பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கு சொந்தமான கரும்புகள் இந்த ஆலைக்கு வருகின்றன.

முதலில் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்புகளை அரைத்து விட்டு, பின்னர் மற்ற ஆலை கரும்புகளை அரவை செய்ய வேண்டும். மேலும் வருகிற 23–ந் தேதி வரை அரவை பருவம் நடைபெறும் என கூறப்படுகிறது. அனைத்து கரும்புகளையும் அரவை செய்த பின்னர் தான் அரவை பருவத்தை நிறுத்த வேண்டும்’’ என்றார்.


தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பை பதிவு செய்துள்ளோம். இந்த கரும்பை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெட்ட வேண்டும். ஆனால் ஆலையில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்த பின்னர் தான் வெட்ட முடியும் என்று கூறினார்கள். இதையடுத்து நாங்கள் வெளி ஆலைக்கு வெட்டி அனுப்ப சொல்லுங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இதனால் கரும்புகள் காய்ந்து வருகின்றன. வெட்டி எடுத்துச்செல்லப்படும் கரும்புகளும் 3 அல்லது 4 நாட்கள் வாகனங்களில் அப்படியே நிற்கின்றன. காரணம் கேட்டால், வெளி ஆலைக்கு சொந்தமான கரும்பு அரவைக்கு வருவதால், இங்குள்ள கரும்பை எடுக்க முடியவில்லை என கூறுகிறார்கள். வெளி ஆலை கரும்பு அரவைக்கு அனுமதி கொடுத்தவர்கள், நமது ஆலை பழுதாக இருந்தபோது ஏன் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. தற்போது வெட்டுக்கூலி, லாரி வாடகை, கரும்பு காய்ந்ததால் எடைகுறைவு என விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெட்டப்பட்ட கரும்புகளும் வயலில் காய்ந்தபடி கிடக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.’’என்றார்.

Next Story