பூதப்பாண்டி அருகே பரிதாபம் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை


பூதப்பாண்டி அருகே பரிதாபம் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 8:32 PM GMT)

பூதப்பாண்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42), தொழிலாளி. இவருக்கு கவிதா(39) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று செல்போன் ரீசார்ஜ் செய்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, முருகன் மனைவியை தாக்கி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கவிதா கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அழகியபாண்டியபுரம் வன ஊழியர்கள் சைபன் பாலம் கடுக்கன்திட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வனபகுதியில் உள்ள ஒரு மரத்தின் அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதை கண்டனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அங்கையர்கண்ணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் முருகன் என்பதும், குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும், உடல் அழுகியதால் மரத்தில் இருந்து அறுந்து விழுந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story