திருப்பனந்தாள் அருகே அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


திருப்பனந்தாள் அருகே அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:20 PM GMT)

திருப்பனந்தாள் அருகே, அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பனந்தாள்,

கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்த பகுதியில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் மின் அழுத்த குறைபாடு காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.

சாலை மறியல்

இந்த மின்தடையால் விவசாயிகள் தாங்கள் பயிரிடப்பட்டுள்ள கோடை நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மறியல் போராட்டத்துக்கு உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியமூர்த்தி, விவசாய சங்க தலைவர் சங்கர், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியபிள்ளை, வர்த்தக சங்க தலைவர் பிச்சுமணி, பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் ராதா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாண்டியன், விவசாய சங்க அமைப்பாளர் கலைமணி, உழவர் பேரியக்கம் ஒன்றியத்தலைவர் தங்க.அன்பழகன், மாவட்ட தலைவர் திருஞானம் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள், போராட்டத்தில் கலந்து கொண்டு தடையின்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story