பண்ருட்டி அருகே, வழிப்பறி கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பண்ருட்டி அருகே, வழிப்பறி கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 10:34 PM GMT)

பண்ருட்டி அருகே வழிப்பறி கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

பண்ருட்டி அருகே ஆத்திரிக்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ராணி (வயது 30). இவர் கடந்த 25.3.2019 அன்று காலை 9 மணி அளவில் சொரத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வேலன்(41) என்பவர் ராணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்விழி வழக்குப்பதிவு செய்து வேலனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

வழிப்பறி கொள்ளையனான வேலன் மீது ஏற்கனவே முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது.

இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து வேலனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலனை கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Next Story