அக்னி வெயில் உச்சம் தொட்ட நிலையில் திருச்சியில் பரவலாக பெய்த மழை


அக்னி வெயில் உச்சம் தொட்ட நிலையில் திருச்சியில் பரவலாக பெய்த மழை
x
தினத்தந்தி 17 May 2019 11:36 PM GMT (Updated: 17 May 2019 11:36 PM GMT)

அக்னி வெயில் உச்சம் தொட்ட நிலையில் திருச்சியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வகையில் வெயில் வாட்டி எடுத்து வந்தது. கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால், வெயில் தாக்கம் மேலும் அதிகரித்தது. அனல் காற்றுடன் வெயில் அடித்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

சாலையோர வியாபாரிகள், குடைபிடித்தபடியும், சாக்குபையை மேற்கூரைபோல போட்டுக்கொண்டும் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஒரு தடவை மட்டும் கோடை மழை பரவலாக பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கி 13 நாட்களுக்கு மேலாகியும், திருச்சி மாவட்டத்தை தவிர இதர மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. திருச்சி கந்தகபூமி என்பதால், மழை வராது என சிலர் ஆரூடம் கூறி வந்தனர். வருகிற 29-ந் தேதிவரை அக்னி வெயில் நீடிக்கிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது. சாலையில் பொதுமக்கள் நடமாட முடியாத வகையில் வெயில் கோரதாண்டவம் ஆடியது. சாலையில் இருசக்கர வாகனங்கள் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையிலேயே ஓடியதை காணமுடிந்தது.

வெயில் உடல் சூட்டை தணிக்க, பொதுமக்கள் நுங்கு, இளநீர், தர்பூசணி, முலாம் பழம் ஜூஸ், ஐஸ் கிரீம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி அருந்தினர். திருச்சி மாவட்டத்தில் நேற்று வெயில் 107.24 டிகிரியாக பதிவாகி இருந்தது. கடந்த 15 நாட்களில் ஏற்கனவே 4 முறை 107 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகம் திரண்டு, இடி-மின்னல் அடித்தது. சிறிது நேரத்தில் லேசான காற்றுடன் திருச்சி, பொன்மலை, பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், கல்கண்டார் கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. எதிர்பாராத திடீர் மழையால், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் மழையால் அவதிப்பட்டனர். விற்பனையில் பாதிக்கப்பட்டது.

திருச்சி நகரில், மழையால் சாக்கடை கால்வாய்களில் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் காலி குடிநீர் பாட்டில்களால் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கலந்த மழைநீர் வெளியேறி சாலையில் ஓடியது. மேலும் திருச்சி மத்திய பஸ் நிலையம், மேலப்புதூர் சுரங்கப்பாதை, கிராப்பட்டி-எடமலைப்பட்டி புதூர் இடையே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஆனால், போக்குவரத்துக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் இந்த திடீர் மழை காரணமாக திருச்சி மாநகரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

திருச்சி கோரிமேடு, பெரியமிளகு பாறை, பொன்நகர், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் திடீரென ஐஸ் கட்டி மழை பெய்தது. ஓடு மற்றும் சிமெண்டு சீட் வேயப்பட்ட வீடுகளின் மீது ஐஸ் கட்டி மழை பெய்தபோது, படார், படார் என சிறிய ஐஸ் கட்டிகள் விழும் சத்தம் கேட்டது. சிலர், கீழே விழுந்த ஐஸ் கட்டிகளை சேகரித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் ஐஸ் கட்டிகள் உருகின. இந்த ஐஸ் கட்டி மழையால் அப்பகுதி மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக பகலில் வாட்டி வதைத்த வெயிலால், இரவிலும் வீடுகள் வெப்பத்தின் தாக்கம் இருந்து கொண்டே இருந்தது. மின்விசிறியை போட்டாலும் வெப்பக்காற்றுத்தான் வீசியது. இந்த நிலையில் நேற்றைய மழையால், பகலில் வாட்டி வதைத்த வெப்பத்தின் தாக்கம் தணிந்து இரவில் இதமான சீதோஷ்ணநிலை ஏற்பட்டது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.


Next Story