குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்


குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 18 May 2019 11:45 PM GMT (Updated: 18 May 2019 6:35 PM GMT)

குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக பணியாற்றியவர் சி.எஸ்.சிவள்ளி.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எஸ்.சிவள்ளி தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்தார்.

அதுபோல கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் கலபுரகி தொகுதியில் களம் கண்டார்.

இதனால் சி.எஸ்.சிவள்ளி, உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்த குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகள் காலியாகின. அந்த 2 தொகுதிகளில் 19-ந் தேதி (அதாவது இன்று) இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் காங்கிரஸ் சார்பில் குந்துகோல் தொகுதியில் சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி, சிஞ்சோலியில் சுபாஷ் ராத்தோடு ஆகியோரும், பா.ஜனதா சார்பில் குந்துகோலில் சிக்கன்ன கவுடா, சிஞ்சோலியில் அவினாஷ் ஜாதவ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் களத்தில் இருமுனை போட்டி நிலவுகிறது.

தற்போது காங்கிரஸ் வசம் உள்ள இந்த 2 தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் சட்டசபையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 104-ல் இருந்து 106 ஆக உயரும்.

அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த 2 தொகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதற்காக 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 313 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 96 ஆயிரத்து 548 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 86 ஆயிரத்து 744 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 21 பேரும் உள்ளனர். தேர்தலையொட்டி இரு தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story