திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்


திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:00 PM GMT)

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் உள்ள தியாகராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே திருக்காரவாசல் கிராமத்தில் தியாகராஜர் கோவில் உள்ளது. சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோவில் ஆதிவிடங்கர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தீர்த்தத்தில் புனித நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் தைலத்தை பயன்படுத்தி வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வீதி உலா

விழாவையொட்டி நாள்தோறும் காலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், இரவில், பூத வாகனம், கற்பக விருட்ச வாகனம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி தியாகராஜர் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

இதையடுத்து திரளான பக்தர்கள் ‘தியாகேசா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளை வலம் வந்த தேர், நிலையை அடைந்ததும் தியாகராஜ சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 

Next Story