கூடலூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 பேர் பலி


கூடலூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 May 2019 10:45 PM GMT (Updated: 18 May 2019 7:58 PM GMT)

கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 பேர் பலியானார்கள்.

கூடலூர்,

கூடலூர் கிருஷ்ணசாமிகவுடர் தெருவை சேர்ந்தவர் ராஜா. அவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 25). கூலித்தொழிலாளி. கூடலூர் அருகே உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தங்கம் (21). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் கம்பம் சென்றனர். பின்னர் அவர்கள் கம்பத்தில் இருந்து கூடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

இதேபோல் கூடலூர் அருகே உள்ள காந்திமரத்துறையை சேர்ந்த வீரணன் மகன் நாகேந்திரன் (17), அதே பகுதியை சோந்த முருகன் மகன் ஆகேஷ் (14) ஆகியோர் கம்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கையம்மன் கோவில் அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதின. இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் இறந்தார். தங்கம், ஆகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பொன்னிவளவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story