ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா: சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி தலைவர் நாளை தேர்வு காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தகவல்


ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா: சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி தலைவர் நாளை தேர்வு காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தகவல்
x
தினத்தந்தி 18 May 2019 10:00 PM GMT (Updated: 18 May 2019 8:54 PM GMT)

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமாவை தொடர்ந்து சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி தலைவரை நாளை தேர்வு செய்ய இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமாக இருந்தவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். இவரது மகன் சுஜய் விகே பாட்டீல், அகமது நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் காங்கிரஸ் அந்த தொகுதியை தனது கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த சுஜய் விகே பாட்டீல், பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி அவருக்கு அகமது நகர் நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கியது.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், தன் மகனுக்கு ஆதரவாக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் செயல்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரை (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 20-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜூன கார்கேயும் கலந்து கொள்ள உள்ளார்” என்றார்.

இந்த நிலையில் மராட்டிய சட்டசபைக்கு புதிய எதிர்க்கட்சி தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story