பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு


பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:51 PM GMT)

மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.

திருவண்ணாமலை,

தானிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. இதில் தான், கல்வி அதிகாரிகளான எங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கடமை, பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.

கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா? என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறையின்றி பொறுப்பில்லாமல் இருக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.

பள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பெற்றோரும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். அவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியோர் பள்ளி நிர்வாக வளர்ச்சியில் ஒரு உறுப்பினராக பார்க்க வேண்டும்.

100 சதவீத தேர்ச்சி

இந்த பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இனிவரும் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் குறைவானதற்கு ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். இதை உணர்ந்து இனி வருங்காலங்களில் 100 சதவீத தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் இருந்தால் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது பள்ளி வாழ்க்கையில் நடந்த இனிமையான நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் நிதியை பள்ளிக்கு அளித்து குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இனி வருங்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவோம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பம்சமாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களையும்அழைத்து வந்து, நிகழ்ச்சியில் கவுரவித்தனர். இதில் சுமார் 200 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் அருண், சங்கர், கலையரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story