மேலநாகூர் தர்காவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை


மேலநாகூர் தர்காவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 7:00 PM GMT)

மேலநாகூர் தர்காவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். நாகூர் தர்காவுக்கு வரும் மக்கள் மேலநாகூரில் உள்ள தர்காவுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு உண்டியல் உள்ளது.

திருட்டு

சம்பவத்தன்று வழக்கம் போல தர்கா பணியாளர்கள் தர்காவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை பணியாளர்கள் தர்காவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தர்காவின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து நாகூர் தர்கா நிர்வாக தலைவர் சுல்தான் கபீர்சாயுபு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story