தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 7:29 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயின், துக்கி சயாம் பேயிக், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் மாதவி லதா, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

வாக்கு எண்ணும் நாளில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் உரிய நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும். காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். அலுவலர்கள் அனைவரும் தங்களது தேர்தல் பணிக்கான அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள 8 அறைகளில் பொதுப்பார்வையாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்போது கட்டுப்பாட்டு கருவியில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால் உடனடியாக பேட்டரி மாற்ற வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு கருவியில் உள்ள வரிசை எண் மற்றும் தங்களுக்கு வழங்கப்படும் படிவத்தின் வரிசை எண்ணும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் இதனை காண்பிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் ‘சீல்’ வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பழுது ஏற்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான அனைத்து வாக்குகளின் எண்ணிக்கை முடிந்தபின்பு, பழுது ஏற்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் சம்பந்தப்பட்ட வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள சிலிப்களை எண்ண வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பின்பு தான் அடுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை காப்பு அறையில் இருந்து கொண்டுவர வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் தலா 5 வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள சிலிப்களை எண்ண வேண்டும். தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மிகவும் கவனத்துடன் மேற்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story